தேனி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா நேற்றுமுதல் அதன் ராணுவப் படைகளை இறக்கித் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்துவருகின்றனர். இவற்றில் இந்தியாவிலிருந்து கல்விக்குச் சென்ற மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
அவர்களை மீட்பதற்கு இந்திய மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்துவருவதற்கான முயற்சிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.
மேலும் தமிழ்நாடு அரசும் உக்ரைனில் சிக்கியுள்ள நபர்களைத் தாயகம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனை ஒருங்கிணைக்கும்பொருட்டு ஜெசிந்தா லாசரஸ் மாநிலத் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களையும், டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலர், உள்ளுறை ஆணையரத் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288, வாட்ஸ்அப் எண் 9289516716 மின்னஞ்சல் – ukrainetamils@gmail.com எனத் தமிழ்நாடும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேனியைச் சேர்ந்த மூன்று மருத்துவ மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி இன்று (பிப்ரவரி 25) மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த வீரமணியின் மகன் கோபிநாத், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருது பாண்டியன் மகன் ராஜேஷ் பாண்டியன், அயூப்கானின் மகன் சேக் முகமது ஆகிய மூன்று பேர் உக்ரைன் நாட்டில் முறையே 5ஆம், 6ஆம் ஆண்டு மருத்துவம் படித்துவருகின்றனர்.
ரஷ்யப் போரால் உயிர் பயத்தில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தரக்கோரி இன்று அவர்களது பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கோரத்தாண்டவமாடும் ரஷ்யா: நடந்தே நாடு கடந்துவந்த மாணவர்கள்