தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசுகையில்;
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாப்பதிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது தொகுதிக்குட்பட்ட மேகமலையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
நமது நாட்டுக்காக பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார், அவரைப் பற்றி சின்னமனூர் முதல் சிகாகோ வரை நான் பேசினேன், ஆனால் அதை சிலர் திரித்து அவரவர் வசதிக்கேற்ப தவறாக பேசி வருகின்றனர். இதற்கு முந்தைய மத்திய அமைச்சரவையில், இடம் பெற்றிருந்த திமுக தமிழ்நாட்டிற்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை.
ஆனால், தற்போதைய அதிமுக அரசு, மத்திய அரசிடம் எடுத்துரைத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது. மேலும், சபரிமலை - திண்டுக்கல் ரயில் திட்டத்தை செயல்படுத்திட தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன்.
மேலும், பிறக்கும் போது குழந்தை அழவில்லையென்றால், அது ஆரோக்கியமாக இல்லை ஊனமாக இருக்கிறது என அர்த்தம். அதேபோல் வாழ்க்கை முடிந்து, இறப்பதற்கு முன்பு அழ வேண்டும் அப்படி அழவில்லை என்றால் அவர்களின் மனதில் ஊனம் இருக்கிறது என அர்த்தம். ஊனம் உடலில் இருக்கலாம்! மனதில் இருக்கக்கூடாது என்று கூறினார்.
இதையும் படிங்க: தேனியில் சமுதாய வளைகாப்பு - ஓபிஎஸ் பங்கேற்பு!