கரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும் காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தப்படுகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செய்யப்பட்டு அரசு அலுவலங்கள் செயல்பட அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களை திறக்கக்கோரி இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து வழக்காடும் முறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர்கள் கோசமிட்டனர்.
மேலும் பொது முடக்க காலத்தில் வாழ்வாதரம் இழந்த வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியில் இருந்து ரூ.1லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு தமிழக அரசு ரூ.50கோடி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் சாத்தான்குளம் விவகாரத்தில் முறையாக செயல்படாத கீழமை நீதிமன்ற நடுவர் மற்றும் அரசு மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: எல்லையிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிய சீனப் படை - இந்திய ராணுவம் தகவல்