கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலம், தேயிலை, காபி உள்ளிட்ட நறுமணத் தோட்ட வேலைக்காக தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்றுவருகின்றனர். இதற்காக குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடிமெட்டு ஆகிய 3 மலைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான ஜீப்களில் அதிகாலை முதல் வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதுண்டு.
இந்நிலையில் வழக்கம்போல இன்று தேனி மாவட்டம் கோம்பை பகுதியிலிருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டம் புளியமலை பகுதிக்கு தோட்ட வேலைக்காக, தொழிலாளர்களை ஜீப் ஓட்டுநர் நதியழகன் தனது அழைத்துச் சென்றுள்ளார்.
கம்பம் அருகே உள்ள கம்பம் மெட்டு மலைச்சாலையில் ஜீப் சென்றுகொண்டிருக்கையில், அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது ஜீப் ஏறி இறங்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் சென்ற 6-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் நதியழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கம்பம் மெட்டு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றுள்ளனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நதியழகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நதியழகனின் உடலை உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கேரள மாநிலம் கம்பமெட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வேலையாட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கம்பம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கடலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கார் ஓட்டுநருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை