தேனி மாவட்டம் அன்னஞ்சி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த அமீர்சுல்தான் என்ற முதியவர் உடல்நிலை காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையிலுள்ள கபூர்ஸ்தலம் அருகே அவரது உறவினர்கள் குழி தோண்டியுள்ளனர்.
இச்சம்பவ இடத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பது சம்பந்தமான வழக்கு ஏற்கனவே கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணையில் உள்ளதால், இதற்கு அருகில் உள்ள இடத்தின் உரிமையாளரான வடபுதுபட்டியைச் சேர்ந்த நாகஜோதியின் கணவர் குமரேசன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இவர் இந்து எழுச்சி முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில், அன்னஞ்சியைச் சேர்ந்த கனவாபீர், பைஜில் ரகுமான், தீன்ராஜா ஆகியோர் தாக்கியதில் குமரேசனுக்கு உடலில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய சமூகத்தினர் திடீரென தேனி - பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காவல் நிலையம் முற்றுகை:
தொடர்ந்து, அருகிலிருந்த அல்லிநகரம் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், ஏற்கனவே குழி தோண்டிய இடத்தில் உடலை புதைப்பதற்கு அனுமதித்த பின்னர் அங்கு அடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக இரு தரப்பும் அளித்த புகாரின் பேரில் அல்லிநகரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த இடத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பது சம்பந்தமான தகராறு ஏற்பட்டதால் தற்போது அதற்கான வழக்கு கோட்டாட்சியர் தலைமையில் விசாரணையிலுள்ளது. இந்நிலையில், தற்போது இஸ்லாமிய சமூகத்தினரது உடலை அடக்கம் செய்வதில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரியில் 8 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்த காவல் துறையினா்