கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்றவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடி, சின்னமனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு 23 நபர்கள் சென்று வந்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு சென்ற அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு கரோனா ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஏப்ரல் 1ஆம் தேதி) திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட 5 முக்கிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும், டெல்லி மாநாட்டுக்குச் சென்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வசித்து வந்த பகுதிகளிலிருந்து 7 கி.மீ தூரத்துக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இதற்காக சுகாதாரம், வருவாய், காவல்துறைகளுடன் அங்கன்வாடி பணியாளர்களை களப்பணிக்கு உட்படுத்தி, 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் குழுக்கள் அமர்த்தி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இந்த நோய் தொற்று அதிக ஆபத்து தொடர்பு (High risk contact) மற்றும் குறைவான ஆபத்து தொடர்பு (Low risk contact) என்று இருவகைப் படுத்தப்பட்டுள்ளது. அதிக ஆபத்து தொடர்பு (High risk contact) நோய் தொற்று உள்ளவர்களின் மனைவி, குழந்தை, தாய், தந்தையர் மற்றும் அவர் பணியாற்றும் இடம், அவர் சென்று வந்துள்ள இடங்களில் உள்ளவர்களையும் பரிசோதனைக்குட்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிக்க வேண்டும்.
குறைவான ஆபத்து தொடர்பு (Low risk contact) நோய் தொற்று உள்ளவர்களின் பக்கத்து வீடு மற்றும் அருகில் இருந்தும் தொடர்பு இல்லாமல் உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.