தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (42). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு செல்வராணி (32) என்ற பெண்ணுடன் திருமணமாகி தினேஷ்குமார், யோகேஷ் ஆகிய என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், கணவருடன் கட்டட வேலைக்குச் சென்று வந்த செல்வராணி, கடந்த ஐந்து நாள்களுக்கு முன் கீழே விழுந்ததுள்ளார். தொடர்ந்து நேற்று (டிச.27) வயிற்று வலி ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டவரை நள்ளிரவில் போடியில் உள்ள தனியார் மருத்துமவமனையில் சிகிச்சைக்காக அவரது வீட்டினர் அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு செல்வராணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (டிச.28) அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த செல்வராணியின் கணவரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல் துறையினர் இறந்தவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், செல்வராணி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல் குறைவதற்காக பாரசிட்டமால் மருந்து கொடுத்ததாகவும் அதன் பின்னரும்; வலி குறையாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியுற்றவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். ஆனால் சிறிது நேரத்தில் செல்வராணி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, உடற்கூராய்வுக்காக காவல் ஆய்வாளருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த உறவினர்கள் பின்னர் சடலத்தை பெற்றுச் சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசில் அதிமுக முறைகேடு - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு