தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவராமன் - தொட்டிச்சிக்கனி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று மகன்களும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. சிவராமன் அவரது வீட்டிலேயே பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து, பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சிவராமன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது மனைவி தொட்டிச்சிக்கனி வீட்டினுள் வேலை செய்துள்ளார். இவர்களின் கடைசி மகனான இரண்டரை வயது குழந்தை கிருஷ்ணன், அங்கன்வாடியில் பள்ளி முடித்து வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தார்.
வீட்டு வேலையை முடித்துவிட்டு தொட்டிச்சிகனி வெளியே குழந்தையை பார்க்கையில், குழந்தையை காணவில்லை. இதையடுத்து வீட்டைச்சுற்றி தேடிப்பார்க்கையில், வீட்டு பயன்பாடு மற்றும் மாடுகளின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த 5 அடி ஆழம்கொண்ட குடிநீர் தொட்டியில் குழந்தை கிருஷ்ணன் கிடந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தொட்டிச்சிகனி, உடனடியாக கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணனை கோம்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோம்பை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த குழந்தை கிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டரை வயது குழந்தை பெற்றோரின் அஜாக்கரதையால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டிராக்டர் மீது பைக் மோதி 3 பேர் உயிரிழப்பு!