தேனி: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பத்திற்கும் மேற்பட்டோரைக் கொன்ற அரிக்கொம்பன் ஒற்றை காட்டு யானையைக் கடந்த மாதத்தில் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் யானையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அதன் கழுத்துப் பகுதியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பெரியார் புலிகள் வன சரணாலய பகுதிக்குள் அரிக்கொம்பன் விடப்பட்டது.
பின்னர், அங்கிருந்த தமிழக வனப்பகுதியான ஹைவேவிஸ் மேகமலை பகுதிக்குள் உலா வந்த அரிகொம்பன் அங்கிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தியும், மேகமலை சாலையில் வந்த அரசு பேருந்தை வழிமறித்து அச்சுறுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதனால் மேகமலை பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
பின்னர் அங்கிருந்து பல கிலோமீட்டர் பயணித்த அரிக்கொம்பன் லோயர் கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்து, கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. பகல் நேரத்தில் தோட்டுப்பகுதிக்குள் தஞ்சம் அடையும் அரிக்கொம்பன் அதிகாலை நேரத்தில் இடம் பெயரும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்த அரிக்கொம்பன் யானையைப் பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தமிழக வனத்துறையினர், கேரள வனத்துறையினர் உதவியுடன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவி கொண்டு அதன் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி காலையில், கம்பம் நகர்ப் பகுதிக்குள் திடீரென புகுந்த அரிக்கொம்பன் அங்கிருந்த பொதுமக்களை விரட்டத் தொடங்கியது. இதனால் கம்பம் நகர்ப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நகராட்சி சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் எச்சரிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மீண்டும் தனியார் தோட்டத்திற்குத் தஞ்சம் புகுந்த அரிக்கொம்பன் அங்கேயே தங்கியிருந்தது. அப்போது யானையை படம் பிடிப்பதற்காக சில இளைஞர்கள் யானை தஞ்சம் அடைந்துள்ள தோட்டுப்பகுதிக்குள் ட்ரோன் கேமராவை பறக்க விட்டபோது அதை பார்த்து எரிச்சல் அடைந்த அரிக்கொம்பன் அப்பகுதியை விட்டு வெளியேறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் மீண்டும் அரிக்கொம்பனை பின் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் 28-ஆம் தேதி அதிகாலை கம்பம் பகுதியிலிருந்து சுருளிப்பட்டி அருகே உள்ள யானை கஜம் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிக்கொம்பன், அங்கிருந்த விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி அப்பகுதியில் தஞ்சம் அடைந்தது.
இதனால் சுருளிப்பட்டி அருகே உள்ள சுருளி அருவிக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். பின் அங்கிருந்து அடுத்த நாள் காலை கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணைப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் யானை புகுந்தது. கிராமப் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வனப்பகுதிக்குள் யானை சென்று விட்டதால் மீண்டும் கிராமப் பகுதிகளுக்கு வரவிடாமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்கு முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதற்காகப் பொள்ளாச்சி பகுதியிலிருந்து முத்து, உதயன், சுயம்பு என்ற மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளிலிருந்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு யானையைப் பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டனர். சண்முகா நதி அணைப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் புகுந்த அரிகொம்பனை தொடர்ந்து வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 4) இரவு சின்ன ஓவுலாபுரம் பகுதியில் யானை வருவதை அறிந்த வனத்துறையினர் யானையைப் பிடிப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கம்பம் வன அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றும் கும்கி யானைகள் மற்றும் ஜே.சி.பி வாகனங்களை வரவழைத்து யானையைப் பிடிப்பதற்குத் தயார் நிலையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை (ஜூன் 5) யானையைப் பிடிப்பதற்கு ஏதுவான இடம் அமைந்ததால் மருத்துவக் குழு மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையைப் பிரத்தியேக வாகனத்தில் ஏற்றிப் பிடித்தனர். பத்து நாட்களுக்கு மேலாகக் கம்பம் பகுதிகளுக்குள் உலா வந்தும், தோட்ட பகுதிக்குள் தஞ்சம் அடைந்த அரிகொம்பனின் ஆட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதன் பின்னர், சின்ன ஓலாபுரம் பகுதியிலிருந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிக்கொம்பன், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் தேனி முக்கிய சாலை வழியாக ஆண்டிப்பட்டியை கடந்து கொண்டு செல்லப்படுகிறது. யானையை வாகனத்தில் கொண்டு செல்லும்போது வழிநெடுகிளும் ஏராளமான பொதுமக்கள் இளைஞர்கள் யானையைப் பார்ப்பதற்காகவும், தங்கள் கைப்பேசியில் படம் எடுப்பதற்காகவும் குவிந்து வருகின்றனர்.
மேலும் அரிக்கொம்பன் எங்கு கொண்டு சென்று விடப்படும் என்பது குறித்த தகவல்கள், வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட அரிகொம்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலையில் விடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் விடப்படுமா? அல்லது யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு மருத்துவ உதவி மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டதால் கம்பம் கூடலூர் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகத் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பத்து நாட்களுக்கும் மேலாகத் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பலரையும் அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் தற்போது பிடிக்கப்பட்டுள்ளதால், அச்சமின்றி பொதுமக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மேலும், அரிக்கொம்பனுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகவும், அதற்கு முறையான மருத்துவ வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: Arikomban Elephant: ஆட்டம் காட்டிய அரிக்கொம்பனை பிடித்த வனத்துறை.. கம்பத்தில் 144 தடை நீக்கம்!