தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு உயர் ரக காட்டன் சேலைகள் விசைத்தறி கூடங்களிலும், ஒப்பந்த அடிப்படையில் அவரவது சொந்த வீடுகளிலும் தறி அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது வழக்கம். கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்தது. இதனால், புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, 13 விழுக்காடு கூலி உயர்வு வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்களிடம், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, 13 விழுக்காடு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நூல் விலை உயர்வை காரணம் காட்டி, பழைய கூலி ஒப்பந்தத்தில் தான் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று உரிமையாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் புதிய கூலி உயர்வு பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் விசைத்தறி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சாலை மறியல், வட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தினர்.
பின்னர் ஆண்டிபட்டி வட்டாச்சியர் சந்திரசேகர் தலைமையில் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்தும் முரண்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இன்று (பிப். 02) முதல் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்து கட்சியைச் சேர்ந்த தொழிற் சங்கங்களும் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் நெசவு தொழில் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெசவாளர்களின் கொண்டாட்டமில்லா தீபாவளி!