நீலகிரி: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா படகு இல்லம் ஆகியவை உள்ளன. இதனை நம்பியே தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் நான்கு மாத காலமாகச் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாவை நம்பியிருந்த அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊரடங்குத் தளர்வுகளை அளித்தது. இதில் தாவரவியல் பூங்கா, படகு இல்லங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.