நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு பணிபுரிய அனுப்பப்படுகின்றனர். இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சிபெற்ற 274 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் பேரக்சில் நடைபெற்றது.
பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீதும் ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மேலும் வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்நிலையில் மரியாதையை ஏற்றுக்கொண்ட பயிற்சி முகாம் தலைவரான கமாண்டர் ஆர்.எஸ். குரையா தனது உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக அணி வகுத்துவந்த காட்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தனர். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய, ஆறு வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.