நீலகிரி: அரசு மற்றும் தனியார், டி போர்டு வாகனங்கள் தங்களது வாகனங்களை ஓட்டுவதற்குத் தகுதியானதாக இருப்பதாக வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மூலம் எப்.சி(vehicle fitness certificate) எனப்படும் தகுதிசான்று பெற்றப் பின் இயக்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி.
இந்நிலையில் குன்னூர் நகராட்சிக்குச்சொந்தமான 30 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக இயக்கப்படும் சிறிய லாரிகள், மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யும் லாரி என 5-ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதிச்சான்று பெறாமல் பல்வேறு பழுதுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்த வாகனங்களின் டயர்கள் தேய்ந்தும், அடிக்கடி பழுதாகியும் வருவதால் பணிமனையில் விட்டு இவற்றைப்பழுது நீக்கி, தரச்சான்றுடன் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து குன்னூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது வாகனங்களுக்கு டயர் மாற்றுவது, 'பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது, வெல்டிங் ஒர்க் போன்ற பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. கூடுதல் தொகையாக இருப்பதால், ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களையும் பழுது நீக்க அனுப்பி வைத்துவிட்டால் இங்கு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் பாதிக்கப்படக்கூடும். எனவே, பகுதி பகுதியாக அனுப்பி விரைந்து பழுதுகள் நீக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் தகுதிச்சான்று பெறப்படும்’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை - நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவு