ஊட்டி: தாவரவியல் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர், கேசவன். இவர் ஊட்டி மார்க்கெட்டில் சாவிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன்(20).
இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே இவருக்கு பழைய பைக்குகளை சேகரிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பைக், இந்தியாவில் உள்ள பல பழமை வாய்ந்த பைக்குகள், ஸ்கூட்டர் என 15 பழமையான இருசக்கர வாகனங்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும், மினியேச்சர் கார்கள் மற்றும் பைக்குகளைத் தயாரிக்கும் இவர் அதனைத் தனது வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார்.
ஸ்கூட்டர் இன்ஜினைப் பயன்படுத்தி கார் தயாரிப்பு
இந்நிலையில், இவர் தன்னிடம் இருந்த இரு சக்கர வாகன இன்ஜினைக் கொண்டு ஒரு சிறிய காரை தயாரித்துள்ளார்.
பெரிய கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிறிய காரில் உள்ளன. மேலும், இருவர் பயணிக்கும் வகையில் அந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அடிக்கடி அவர் நகரில் வலம் வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இது குறித்து ரோஷன் கூறுகையில், 'எனக்கு சிறு வயது முதலே பழமை வாய்ந்த பைக்குகள் சேகரிப்பது பிடிக்கும். இதனால், பல பைக்குகள் சேகரித்து வைத்துள்ளேன். மேலும், மினியேச்சர் கார்கள், பைக்குகள் ஆகியவைகளும் தயாரிப்பது எனது பொழுதுபோக்கு. இந்நிலையில், ஒரு சிறிய காரைத் தயாரிக்க முடிவுசெய்தேன். அதன்படி ஸ்கூட்டர் இன்ஜினைக் கொண்டு ஒரு சிறிய காரை நானே தயாரித்தேன். அந்த காரில் இருவர் பயணிக்க முடியும். பெரிய காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிறிய காரிலும் உள்ளது' என்றார்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 60 புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி!