நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதி, முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் முதுமலையை சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் மசினகுடி பகுதியிலுள்ள தனியார் விடுதிகளில் ஓய்வெடுப்பார்கள்.
இந்த விடுதிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். இந்த நிலையில் கடந்தாண்டு யானை வழித்தடம் பிரச்னை காரணமாக 38 தனியார் விடுதிகள் மூடப்பட்டன. இதனால் தனியார் விடுதிகளை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வேலைவாய்ப்புயின்றி தவித்துவரும் அம்மக்கள் பயன்பெறும் விதமாக மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி, மரவகண்டி ஆகிய ஏரிகளில் படகு சவாரி தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதியை மட்டும் பார்த்துச் செல்கின்றனர். இயற்கை அழகு நிறைந்த இந்த ஏரிகளில் படகு சவாரி தொடங்கினால், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்று மகிழ்ச்சியுடன் செல்வார்கள். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நலிந்துவரும் யூகலிப்டஸ் தைலத் தொழில்!