Weather update: சென்னை: வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (12.01.2023) விலகியது. இதனையடுத்து வானிலை குறித்த முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை (12.01.2023) மற்றும் நாளை மறுநாள்(13.01.2023) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும், உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.01.2023 முதல் 16.01.2023 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும்; காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும்; மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.