நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட மசினகுடி அருகே பொக்காபுரம் என்னும் குக்கிராமம் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிகுள் அமைந்துள்ள இந்த குக்கிராமத்தில் வனப்பகுதி நடுவே பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை இங்கு திருவிழா, தேர் பவனி நடைபெறும். இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாக, வருகை தந்து தங்களது நேர்த்திக் கடனை செய்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
அதே போல், இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து கடை வைத்து வியாபாரம் செய்வார்கள். இந்நிலையில், கடந்த திங்கள் முதல் புதன் கிழமை வரை அம்மன் கோயில் திருவிழா, தேர் பவனி ஆகியவை நடைபெற்றது. பின்னர் கடை வியாபாரிகள் கடைகளைக் காலி செய்தனர்.
அப்போது, வனப்பகுதி என்றும் பாராமல் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இந்தக் கழிவுகளை கால்நடைகள், வன விலங்குகள் உண்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதனால், தடை செய்யபட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டிய கடை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மேலும் கடை உரிமையாளர்களை எச்சரித்து அடுத்த ஆண்டு இதே போல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!