நீலகிரி மாவட்டம், மசினக்குடியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீக்காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஜன.20ல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ், பாரத்ஜோதி ஆகியோர் தலைமையில் யானையின் உடலுக்கு நேற்று(ஜன.21) உடற்கூராய்வு செய்யப்பட்டது.
அதன் முடிவில், யானையின் காது பகுதியில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அக்காயங்களால் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு, அதிகளவில் ரத்தம் வெளியேறி யானை உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக யானை மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டயர் ஒன்றில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிங்காரா வனத்துறையினர், மாவனல்லா பகுதியை சார்ந்த ரிக்கி ராயன்(31), ரேமண்ட் டீன்(28), பிரசாந்த்(36) ஆகியோர் இதில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர். அதில், ரிக்கி ராயன்(31) தப்பி ஓடிய நிலையில், மீதமுள்ள இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜன.14ஆம் தேதியன்று தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானை ஒன்று கன்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழப்பு!