தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகை முதுமலை வனவிலங்கு காப்பகத்திற்கு, ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். மேலும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கும் சென்று வன விலங்குகளைக் காண சிறியோர் முதல் பெரியோர் வரை ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனலிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பது வழக்கம். இந்நிலையில் முதுமலையில் உள்ள வனத் துறை வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது யானை ஒன்று கூட்டமாக இருந்த செந்நாய்களை துரத்தும் காட்சியை கண்டுகளித்தனர்.
அதிலும் குறிப்பாக செந்நாய்கள், யானையின் அருகே சென்று விளையாட்டுக் காட்டுவதும், பின்னர் யானை அதனை துரத்துவதுமாக இருந்தது. இந்த அற்புதமான காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். மேலும், அந்த அரியவகை காட்சியை அவர்கள் காணொலி எடுத்துக் கொண்டனர். இந்தக் காணொலி தற்போது வைரலாக பரவிவருகிறது.