தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடையில் மருத்துவர் சீட்டு இல்லாமல் இளைஞர்கள் இருவர் தூக்க மாத்திரை கேட்டனர்.
அரிவாளைக் காட்டி மிரட்டிய இளைஞர்கள்
அதற்கு அங்கிருந்த பெண் ஊழியர் மருத்துவர் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வுசெய்த காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட இருவரையும் இரண்டு மணிநேரத்தில் பிடித்தனர்.
போதைக்காகத் தூக்க மாத்திரை
அதன்பின் அவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் (20), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (19) என்பதும் இந்த மாத்திரையைப் போதைக்காகப் பயன்படுத்துவதும் தெரியவந்தது. ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை விரைந்து பிடித்த காவலர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பாராட்டினார்.
இதையும் படிங்க: முருகனுக்கு மொட்டை, டாஸ்மாக்கில் சரக்கு - நடுரோட்டில் ரகளை செய்த ஆசாமி