தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலம் ஒன்று உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம், இப்போது பயன்பாட்டில் இல்லை. அதனால், பல இடங்களில் சிதலமடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து தள்ளி அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தக் கட்டடத்தை கடந்துச் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், குழந்தைகள் சிலர் பெற்றோரின் கண்டிப்பையும் மீறி அந்த பகுதியில் விளையாடி வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் உடனே இடித்து தள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.