கும்பகோணத்தை அடுத்த திருமண்டங்குடி அருகே இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சரியான முறையில், கரும்பு அரவைச் செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் வெட்டப்பட்ட கரும்பிற்கு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பணத்தினை, சரியாக வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கரும்பு அரவையை ஆலை நிறுத்தியது. இதனால் கரும்பு பயிர் செய்த விவசாயிகள் பயிர் செய்த கரும்பினை வேறொரு ஆலைக்கு வெட்டி அனுப்பினர். இந்நிலையில், 2018 மே மாதம் முதல் 2019 ஜூலை மாதம் வரை 18 மாதங்கள் சர்க்கரை ஆலையில் பணிபுரியும், 287 ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னையிலிருந்து குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து திரும்பியது. இதனைத்தொடர்ந்து ஊதியம் வழங்கா விட்டாலும் பரவாயில்லை, பணிக்கு வருவோம் என ஊழியர்கள் தெரிவித்ததன் பேரில் தொடர்ந்து பணிக்கு ஊழியர்கள் சென்று வந்தனர். இந்த நிலையில், ஆலையின் நுழை வாயிலில் உள்ள தகவல் பலகையில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டது.
அக்கடிதத்தில் 11 பேர்கள் மட்டும் ஆலைக்கு பணிக்கு வந்தால் போதும் என்றும், மீதமுள்ளவர்கள் பணிக்கு வர வேண்டாம் என தெரிவித்திருந்தது. இதனைக் கண்டித்து நேற்று அதிகாலை ஐஎன்டியூசி தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆலை வாயிலில் நின்று ஆர்ப்பாட்டமும் முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். அதிகாலை பணிக்குச் செல்லும் காவலர்களையும் பணிக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.