தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வா.கொள்ளைக்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பள்ளிகள் மற்றும் காவல் நிலையம் என அனைத்தும் உள்ளதால் இந்த ஊருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டம் எல்லை பகுதி என்பதால் போக்குவரத்து வாகனங்கள் அதிக அளவில் இந்த பகுதி வழியாக செல்கின்றன. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு செல்ல வேண்டுமென்றால் வா.கொள்ளைகாடு வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்தப் பிரதான சாலை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் விவசாய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது.
பள்ளி வாகனங்கள் இப்பகுதியில் செல்லமுடியாமல் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் சுற்றி பட்டுக்கோட்டை அறந்தாங்கி பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. இதேபோல உடல் நலம் பாதித்து ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடியாமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து முறைப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: தேசிய ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கக் கோரிக்கை!