தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில் மீத்தேன் எடுப்பது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி நேரில் ஆஜராகினார். இதனையடுத்து ஒரத்தநாடு நீதிமன்றம் திருமுருகன் காந்திக்கு ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் பாப்பாநாடு காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு உள்ள அனைவரும் அனைத்து கட்சியின் மீது விமர்சனம் செய்கின்றோம். ஆனால் பாஜக அரசு மட்டும் தனி நபர் தாக்குதலை நேரடியாக நடத்தியுள்ளது. மேலும் சமூக செயற்பாட்டாளர்களின் குடும்பத்தாரை அச்சுறுத்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையின் உதவியோடு இதுபோன்ற சமூக விரோத செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருப்பதற்கு பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம், விளை நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டம் ஆகியவை தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என முதலமைச்சர் சொல்கிறார். மேலும் வெளிப்படையாக வாக்குறுதி கொடுக்கிறார். வாக்குறுதி கொடுக்கும் அதே தருணத்தில் காவல்துறையினரை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பது, அதை எதிர்த்துக் கேட்கும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது போன்ற செயல்கள் ஜனநாயக நாட்டில் நடைபெறாது ஆனால் இங்கு நடைபெறுகிறது. வெள்ளைக்காரன் காலத்தில் நடைபெற்றது போல், இங்கு இருக்கும் மக்களை விரட்டிவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்திற்காக நிலங்களை பறித்து, நில அபகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை என்பது மக்களை பாதுகாக்க தான் உள்ளது, கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக இல்லை" என திருமுருகன் தெரிவித்தார்.