கண், காது, மூக்கு மற்றும் தோல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அமெரிக்கா, லண்டனில் இருப்பது போல் உள்நாட்டிலேயே அதி நவீன மென்பொருள் தொழில்நுட்பம் தேவை என மருத்துவர்களும், மருத்துவ நிறுவனங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள லாஜிக் ரிசர்ச் லேப் என்னும் மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் நிறுவனத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக லேசர் அறுவை சிகிச்சைக்கான அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் ஒன்றை அதன் நிறுவனர் ஹரி பிரகாஷ் உருவாக்கியுள்ளார். இதன்மூலம், தொழில்நுட்பத்தை கொண்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவ நிறுவனம் லேசர் அறுவை சிகிச்சை இயந்திரங்களை வடிவமைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வெற்றிகரமான அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.
இந்த நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கிய லாஜிக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் நிறுவனருமான விஞ்ஞானி ஹரி பிரகாஷ் கூறுகையில், ‘இந்த லேசர் இயந்திர மென்பொருளில் சர்ஜிகல், பிராக்சனல், அப்ளேஷன், பைபர் என நான்கும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேசர் இயந்திரத்தின் மூலம் அறுவை சிகிச்சை, தோல் சிகிச்சை கண், காது, மூக்கு சிகிச்சை, நரம்பு சிகிச்சை லேசர் முறையில் குறைந்த நேரத்தில் மேற்கொள்ள முடியும். சதுரம், முக்கோணம், வட்ட வடிவத்தில் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவாகவும், 20 மில்லி மீட்டர் வரையும் சிகிச்சை பெறும் தொழில்நுட்பம் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப முறை உள்நாட்டிலேயே அதுவும் கும்பகோணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ மூலம் ஹைதராபாத், புதுச்சேரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி என பல இடங்களில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு இயந்திரங்களைக் கொண்டு செய்ய வேண்டியதை ஒரே இயந்திரத்தின் உதவியுடன் செய்வதால் அறுவை சிகிச்சையில் நேரம் விரயமாவதும் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் தகுந்த திறமையாளர்களை வைத்தும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும்’ என்றார்.