தென்காசி அருகே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குற்றாலம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மெயின் அருவி, செண்பகதேவி அருவி, ஐந்தருவி உள்பட ஏராளமான அருவிகள் உள்ளன.
தென்காசி மாவட்டமானது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது, குற்றாலம் தான் இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் சீசன் தொடங்கும். அதாவது அண்டை மாநிலமான கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
அப்போது அங்கிருந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக விழும் சாரல் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். தொடர்ந்து 4 மாதங்கள் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் சீசன் களைகட்டும்.
மேலும் இந்தச் சமயத்தில் தான் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குற்றாலத்திற்கு குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு ஜூன்-1ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இதனால், குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது வரை குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வந்தும், பொதுமக்கள் குளிக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் எப்படியாவது அருவிகளில் குளித்து விடலாம் என்ற ஆசையில் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் காவலர்கள் அனுமதி அளிக்காததால் ஏமாற்றத்துடன் அருவியின் முன்புறம் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி செல்கின்றனர். இதற்கிடையில் குற்றாலம் சீசனை நம்பியுள்ள வியாபாரிகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் இங்கு பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் இங்குள்ள வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கடையைத் திறக்கும் ஆசையில் வியாபாரிகள் குற்றாலம் திரும்பியுள்ளனர். ஆனால் தற்போது வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் கடையை திறந்தும் பலனில்லை என்பதால் கடையை மூடி வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் செயல்பட அனுமதித்துள்ளது.
குறிப்பாக பேருந்து சேவையும் தொடங்கியுள்ளதால் குற்றாலம் அருவியிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இங்குள்ள வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து நடத்தும் வியாபாரி மணி கூறுகையில், ”குற்றாலத்தில் கடை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது சீசன் தொடங்கி விட்டது. எனவே கடையை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
குறிப்பாக குற்றாலத்தில் தகுந்த இடைவெளியுடன் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான் எங்களது வாழ்வாரும் பாதுகாக்கப்படும்” என்றார்.
இதேபோல் மற்றொரு வியாபாரியான சின்னத்தம்பி கூறுகையில், ”குற்றாலத்தில் வளையல் கடை நடத்தி வருகிறேன். சீசனை நம்பி தான் வியாபாரம் செய்து வருகிறோம். ஏற்கனவே ஊரடங்கால் இரண்டு மாதமாக கடையை திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்” என்றார். அதேபோல் பொதுமக்கள் தரப்பிலும் குற்றாலத்தில் குளிப்பதற்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: தென்மேற்குப் பருவமழை: தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு!