தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாத காலமாக நீட்டிக்கப்பட்டுவருகிறது.
படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளிலும் சுற்றுலாத் தளத்திற்கு அனுமதி இடம்பெறாததன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இந்தாண்டு சீசன் களைகட்டியும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது சீசன் முடியும் தருவாயிலும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், 37 ஏக்கர் பரப்பளவில், அலங்காரத் தாவரங்கள், அரிய வகை மருத்துவ குணம்கொண்ட பல மரங்கள், மூலிகைச் செடிகள், மூங்கில் தோட்டம், மலர்வனம் கொண்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.
இந்தச் சுற்றுச்சூழல் பூங்கா திறப்பதற்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தற்போது இதமான சூழலுடன் இயற்கை அரண்களுடன் அமைந்திருக்கும் சுற்றுச்சூழல் பூங்கா, சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியளிக்க காத்திருக்கிறது.
இருப்பினும் சுற்றுச்சூழல் பூங்கா திறந்திறப்பது குறித்து தோட்டக்கலைத் துறை சார்பில் எவ்வித முறையான அறிவிப்பும், விளம்பரங்களும் செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் வருகை மிகக் குறைந்தளவே காணப்படுகிறது.