தென்காசி மாவட்டம், கடையம் பாரதி நினைவு நகரில் வசித்து வந்தவர், சேகர்( 66). இவர் இன்று இரவு கடையில் தோசை மாவு வாங்கி விட்டு, தனது மிதிவண்டியில் வீட்டிற்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, எதிரில் வந்த வேன் சேகர் மீது மோதியதில், அவர் மிதிவண்டியிலிருந்து வேனுக்கு அடியில் நிலை தடுமாறி விழுந்தார். வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் ஆய்வாளர் ஆதிலெட்சுமி மற்றும் காவல் துறையினர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த வேனில் புதுமணத் தம்பதியினர், திருமணம் முடிந்து மறுவீடு சென்றதும், வேனை இலத்தூர் காந்தி காலனியைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!