தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை(55). இவர் தனது வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம் வைத்துள்ளார்.
இந்தத் தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாக உள்ளது. அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்தார்.
இதையடுத்து அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) என்பவருக்கும் சொந்தமாக திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. செல்லத்துரை இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, கொல்லி மாடசாமி பல்வேறு முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லி மாடசாமி, நிலம் தொடர்பாக செல்லத்துரையிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செல்லத்துரை வழக்கம்போல் வீட்டுக்கு எதிரில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு உணவை வைத்துவிட்டு நேற்று (ஜூலை 30) இரவு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொல்லி மாடசாமி உள்ளிட்ட சிலர், செல்லத்துரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உறவினர்கள் வந்து பார்த்தபோது செல்லத்துரை ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி செல்லத்துரை உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து கடையநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முக்கியக் குற்றவாளியான கொல்லி மாடசாமி, காளி முத்து, சுரேஷ், அனிஷ், பேச்சி முத்து ஆகியோரை கைது செயதனர்.
மேலும் ஒரு குற்றவாளியை தேடி வருகின்றனர். இருப்பினும் இன்றும்(ஜூலை 31) சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை