தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு இடங்களில் முறைப்படி ஒப்பந்தம் கோரப்படாமல் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இப்பணிகள் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒப்பந்தம் கோரப்படாமல் எப்படி பணிகள் நடக்கின்றன, இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் குறிப்பாக சங்கரன்கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள சின்ன ஒப்பனையாள்புரம், அக்கரைபட்டி ஆகிய இரண்டு ஊர்களிலும் ஒப்பந்தம் விடப்படாமல் பாலம் கட்டும் பணி நடைபெற்றுள்ளது.
இதுபோன்றே பனையூர் சாலையிலிருந்து ஒப்பனையாள்புரத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, தென்காசி அருகே வீரகேரளம்புதூர் முதல் வீராணம் வரை பணிகள் நடந்துள்ளன. தற்போது வழக்குத் தொடரப்பட்டதால் இந்தப் பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தென்காசி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் பிரின்ஸ், உதவி பொறியாளர் செல்வம், சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவி பொறியாளர் மெர்லின், சங்கரன்கோவில் உதவி பொறியாளர் வைரமுத்து ஆகிய ஐந்து பேரையும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.