தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். அரசு மருத்துவரான இவர் மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடநத்தம்பட்டி, புளியங்குடி, பாம்புக்கோயில் சந்தை, திருவேட்டநல்லூர், புன்னையாபுரம், சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.
அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது சொந்த ஊரான வடநத்தம்பட்டி, நான் பணிபுரியும் மடத்துப்பட்டி சுகாதார எல்லைக்குள் உள்ளது. வடநத்தம்பட்டியில் களப்பணியில் ஈடுபடும்போது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் இடையூறு செய்கின்றனர்.
என் மீது பொய்ப் புகார்களையும் அளித்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வடநத்தம்பட்டியைச் சேர்ந்த சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், கஞ்சா, சாராயம் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்கள், இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர்.
இதை கண்டிப்பதால் மருத்துவர் முத்துக்குமார் மீது பொய்யான புகார்களை அளித்தும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். எனவே, மருத்துவருக்கு மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: இந்திய தொழிலதிபர்களை குறிவைத்து நைஜீரிய கும்பலை பண மேசடி: ஒருவர் கைது!