தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பெத்தான்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் கண்ணன். இவரை கடையம் வனச்சரக அலுவலர்கள் சந்தனமரக் கடத்தல் வழக்கில் நேற்று (அக். 13) மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த குடும்பத்தினர் இரவில் கொட்டும் மழையில் சென்று வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கண்ணனை வெளியே விடக்கோரி அவரது குடும்பத்தினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் வந்து குடும்பத்தினரிடம் கண்ணன் வனச்சரக அலுவலகத்தில் இல்லையென்றும், அவர் கைதுசெய்யப்பட்டவுடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், "கண்ணன் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடவில்லை. அவனது உயிருக்கு எதுவும் நேர்ந்தால் வனத் துறையினரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: திருட முடியாத ஆத்திரத்தில் பைக்குக்கு தீவைத்து கொளுத்திய நபர்!