சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, 8ஆம் கட்ட அகழாய்வு பணிக்காக கீழடியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு முன்னர் ஏழு கட்ட அகழாய்வு பணிகளின்போது, நிலங்கள் விவசாயிகளிடம் பெற்று அகழாய்வு பணி நடந்து வந்தது, அதன் பின்பு குழிகள் மூடப்பட்டு நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கபடுவது வழக்கம்.
இந்நிலையில் எட்டாம் கட்ட அகழாய்வு பணி நடந்து முடிந்ததும் அருகே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க அரசு அறிவித்தது. அதற்காக அந்தப் பகுதியில் உள்ள இடங்களை அரசே எடுக்க முடிவு செய்து உள்ளனர். இதற்கு கீழடி பகுதியில் இடம் கொடுத்த விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
முதலமைச்சர் வருகைக்காக தார் ரோடு
மேலும் முதலமைச்சர் பார்வையிட வந்தபோது விவசாயிகளின் நிலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விவசாயிகள் கூறினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “எங்களிடம் எந்த அனுமதியும் வாங்காமல் எங்கள் பட்டா நிலத்தில் ரோடு போட்டு விட்டார்கள். இது எங்களுடைய அனுமதி இல்லாமல் எட்டாம் கட்ட அகழாய்வு பணிக்காக எங்களுடைய நிலத்தை அளந்து எடுத்துக்கொண்டு எங்களுக்கு பணம் தருவதாக கூறுகின்றனர்.
அந்த நிலத்தை வைத்துத்தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடந்து கொண்டிருக்கிறது அதனால் எங்களால் அந்த நிலத்தை விற்க முடியாது” என்றனர்.
நிலத்தை தர மறுத்த விவசாயிகள்
முன்னதாக, திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழடி பகுதியில் இடம் கொடுத்த 17க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு எங்களுடைய நிலத்தை எட்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு தர மாட்டோம் எனவும், எத்தனை லட்சம் கொடுத்தாலும் நாங்கள் தர மாட்டோம் என்று கூறி மறுத்தனர்.
இதனால் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது மேலும் வருவாய் கோட்டாட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு செல்வேன் என்று கூறினார். ஆனால் விவசாயிகள் தங்களுடைய நிலத்தை எதற்காகவும் தரமுடியாது என்று கண்ணீர் மல்க கூறினர்.
இதையும் படிங்க:ராஜேந்திர பாலாஜியை பிடிக்க உதவிய கார் டயர்