சிவகங்கை: மானாமதுரையை சேர்ந்த காமராஜ் (எ) சின்னதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டது.
பட்டியலின மக்கள் அதிகம் இல்லை
மானாமதுரை நகராட்சியில் 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 45 வருடங்களாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பட்டியலின மக்கள் 5760 பேர் மட்டுமே உள்ளனர்.
ஆனால், தற்போது மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவி பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியைப் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை சார்பாக 2022 ஜனவரி 17-ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண் 11-யை ரத்து செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு
தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தற்போது 2022 வருடம் தொடங்கிவிட்டது, தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்கள் அனைவரிடமும் ஆதார் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழக அரசு விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:அவிநாசி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை: 2 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்கள்...சிக்குமா சிறுத்தை ?