சிவகங்கை: சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் வண்டிபந்தயம் இளைஞர்கள் குழு சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.
முதலாவதாக பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும், சிறிய மாடு 32 ஜோடிகள் இரண்டு பிரிவுகளாகவும் என மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற பந்தய மாடுகள் பெரிய மாடு பந்தய எல்கையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்கையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டு பந்தயம் நடைபெற்றது. கமிட்டியினர் கொடி அசைத்தவுடன் மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி மின்னலென சீறிப்பாய்ந்து சென்றன.
பந்தயத்தில் வெற்றி பெற்ற பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.12,000 மூன்றாம் பரிசாக ரூ.9,000 நான்காம் பரிசாக ரூ.6000 வழங்கப்பட்டது.
சின்ன மாடு பந்தயத்தில் இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்ற காரணத்தினால் முதல் பரிசு ரூ.12,000 இரண்டு பேருக்கும், இரண்டாம் பரிசு ரூ.9,000 இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசு ரூ.6000 2 பேருக்கும், நான்காம் பரிசு ரூ.4000 இரண்டு பேருக்கும் என மொத்தம் 12 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாண்டுவட்டி பந்தயத்தினை சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...