சேலத்தில் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பொதுமக்களின் சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அதில், "பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் வகையில் குடிமராமத்துப் பணித்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மொத்தம் உள்ள 40 ஆயிரம் ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்பட்டுவருகிறது.
ஏற்கெனவே முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பியபோது, அடுத்து நீர்ப்பாசன முறைகளை அறிய இஸ்ரேல் செல்வதாகத் தெரிவித்தேன். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரியில் வீணாகும் உபரி நீரை சேமிக்காத முதலமைச்சர், இஸ்ரேல் சென்று நீர்ப்பாசன முறைகளைத் தெரிந்து என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த திமுக, காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகளை கட்டினார்கள். எங்களை விமர்சிக்க தகுதியோ, அருகதையோ திமுகவிற்கு இல்லை. மேட்டூரிலிருந்து கொள்ளிடம்வரை ஒரு தடுப்பணையைக் கூட திமுக கட்டவில்லை. எங்களைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை.
நீர் மேலாண்மை திட்டங்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மூன்று தலைமை பொறியாளர்கள், இரண்டு கண்காணிப்புப் பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, உபரி நீரை தேக்கிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். தற்போது கொள்ளிடம் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலத்தில் தடுப்பணை கட்டும் பணி 20 விழுக்காடு முடிந்திருக்கிறது. அந்தத் தடுப்பணை கட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
மேட்டூர் முதல் கொள்ளிடம்வரை எந்தெந்த இடத்தில் தடுப்பணை கட்டுவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. அடுத்து கரூர் புகளூர் அருகே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. அங்கு 1 டி.எம்.சி. நீரே தேக்கிவைக்கும் வகையில் விரைவில் தடுப்பணை கட்டப்படும்.
காவிரியின் குறுக்கே மூன்று முதல் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவே காவிரிநீரை வீணாக கடலில் கலக்கவிட்டது எந்த அரசு என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கேரளம் சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நதிநீர் திட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - கேரளா இடையேயான நதிநீர் திட்ட பிரச்னைகளுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களில் கிடைக்கும். அதற்கடுத்து அனைத்து நதி நீர் திட்டங்களும் செயல்படுத்தப்படும். திமுகவினர் பதவிகளை அனுபவித்தீர்கள். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களின் பிரச்னைகளை பற்றி சிந்தித்து, அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.