சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டுவருகிறது. இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தச் சங்கத்தில் விவசாய கடன் வழங்கியதில் 2016-2021ஆம் ஆண்டுகளில் அரசு தள்ளுபடி செய்த கடன்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி கூட்டுறவுத் துறை அமைச்சருக்கும், அலுவலர்களுக்கும் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து புகார்களை அனுப்பினர்.
இறந்தவர் பெயரில் மோசடி
இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருந்த வேட்டுவப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இறந்துவிட்டார்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதனைக் கட்டுவதற்கு ராமசாமி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூட்டுறவுத் துறை சார் பதிவாளர் முரளிகிருஷ்ணன் அழைப்பாணை அனுப்பினார்.
கூட்டுறவுச் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் மகன் சித்துராஜ் கடந்த மாதம் 10ஆம் தேதி கூட்டுறவுச் சங்கத்தில் ஆஜராகி தனது தந்தை இறந்துவிட்டதாகவும் அவரது பெயரில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்தார். இதையடுத்து கூட்டுறவு அலுவலர்கள் விசாரணை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
இதனிடையே வெள்ளரிவெள்ளி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்தச் சங்கத்தின் செயலாளர் மோகனைப் பணியிடை நீக்கம்செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'