சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம், நலத்திட்ட விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் பங்கேற்ற அவர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலைமச்சர், அதிமுக அரசு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் வேண்டுமென்றே அதிமுக மீது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சனங்களை வைக்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக ஆட்சியில்தான் பல ஊழல் நடந்துள்ளது. வீராணம் ஊழலில் ராட்சத குழாய்கள் அமைப்பதாக கூறி நிறைவேற்றவில்லை, பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய வீராணம் திட்டம் கொண்டுவந்து அமல்படுத்தினார். எனவே அதிமுக அரசைப் பற்றி விமர்சிப்பதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது' என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி ஐ.நா. சபையில் தமிழின் தொன்மை குறித்து பேசியதை பெருமையாகக் கருதுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மாயனூர் கதவணையை தாங்கள்தான் கட்டியதாக தவறாக கூறி வருகிறார், ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் மாயனூர் கதவணை கட்டப்பட்டது என்றார்.