சேலம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கினால், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு காட்டுத்தீ விபத்து அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் அரியவகை மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாவது தொடர்கதையாக உள்ளது.
மேலும் வனம், மலைப்பகுதியில் வாழ்ந்துவரும் விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்துவருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மலைகள் சூழ்ந்த மாவட்டமான சேலத்தில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், வனத் துறை அலுவலரிடம் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், காட்டுத்தீயை செயற்கையாகப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டுத் தீ பரவலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்புத் துறை, வனத் துறை, அந்தந்தப் பகுதி பொதுமக்களை இணைத்து பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து