சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, தொழில் முனைவோருக்கான கடனுதவி குறித்தும், மானியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் பெண்களுக்கு உரிய நேரத்தில் கடனுதவி வழங்கிட வேண்டும் என்றும், கடனுதவி பெற வருபவர்களிடம் கடுமையான நிபந்தனைகளை விதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய அரசின் தேசிய சிறு தொழில் கழகத்தின் சார்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன பெண்கள் சுய தொழில் துவங்கிட உள்ள பல்வேறு வழி முறைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களுக்கு தேவையான கடனுதவியை பெற்றுத்தர திமுக தலைவர் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இதே போன்று சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பெண்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன பெண்கள் முன்னேற அனைத்து உதவிகளையும் செய்திட உள்ளதாக தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இது போன்று கடனுதவி இருப்பதை மறைத்தது மட்டுமல்லாமல், பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சுய தொழில் தொடங்க வரும் பெண்களுக்கு உரிய கடனுதவிகளை வழங்கிட வங்கி அதிகாரிகளிடம் பரிதுரைத்துள்ளதாகவும், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சுய தொழில் தொடங்க முன்வரும் அனைத்து பெண்களுக்கும் கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'மரவள்ளிக் கிழங்கு வணிகத்தில் ரூ.504 கோடி வர்த்தகம்' - சேகோசர்வ் கூட்டமைப்பு தகவல்!