சேலம் மாவட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியில் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் நேச்சர் ஆஃப் ஒயில்ட் டிரஸ்ட் (wildlife trust) சார்பில் நடத்தப்படுகிறது.
மாவட்ட வனத்துறை அலுவலர் பெரியசாமி தலைமையில் 50 தன்னார்வலர்கள் அடங்கிய 8 குழுவினர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள மேட்டூர், சேர்வராயன் ஏற்காடு அடிவாரம் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் எச்சம், தண்ணீர் அருந்தும் இடம் மற்றும் கால் பதிவுகளைக் கொண்டு எந்த மாதிரியான விலங்குகள் இங்கு வந்து செல்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
வனவிலங்குகளின் கால் தடங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்யும் அலுவலர்கள், தொடர்ந்து சம்பந்தப்பட்ட கால்பதிவு கொண்ட விலங்குகள் எங்கு செல்கின்றன? எங்கு இடம் மாறுகின்றன? என்பது குறித்து எதிர்காலத்தில் கணக்கிட இந்த ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தப்படும் என கூறுகின்றனர்.
நாளையுடன் முடிவடையும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஒட்டுமொத்த வனவிலங்குகளின் என்ணிக்கை, புதிய விலங்குகளின் வருகை மற்றும் அதன் வழித்தடம் போன்றவை குறித்தும் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையை மாவட்ட வனத்துறைக்கும், தன்னார்வலர்களுக்கும் அனுப்பப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.