சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஆத்தூர் சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி இரவு ரவுடி தனசேகரன் என்பவர் தனது கூட்டாளி ராகதேவன் என்பவருடன் பத்மநாபனின் உணவகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கத்தியைக் காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார்.
ஆனால் மிரட்டலுக்கு பயப்படாத பத்மநாபன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தனசேகரன் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் பத்மநாபன் அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார். இருப்பினும் தன்சேகரன், அவரது கூட்டாளியுடன் சேர்ந்து உணவகத்தை அடித்து நொறுக்கி கல்லாப்பெட்டியில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பத்மநாபன் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தனசேகரன் பல இடங்களில் அடாவடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க பரிந்துரைத்தார்.

இதையடுத்து, அவர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சேலம் ரயில் பாதையில் வெட்டுக்காயங்களுடன் ரவுடியின் சடலம்: கொலையா... விபத்தா?