தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு பரிந்துரைப்படி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வு சனிக்கிழமை (ஏப்.10) தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்வை, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர், “இது போன்ற மக்கள் நீதிமன்றங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க இந்த நீதிமன்றம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என்றார்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வனிதா, சென்ற எட்டு மாதத்திற்கு முன்னர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இவர் தனக்கு நிவாரணம் கேட்டு மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி குமரகுரு விபத்தில் படுகாயமடைந்த வனிதாவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் ஓரு லட்சத்து 65 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கான காசோலை சனிக்கிழமை (ஏப்.10) மாவட்ட நீதிபதி குமரகுரு, பாதிக்கப்பட்ட வனிதாவிடம் வழங்கினார். இதேபோல் வெள்ளிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, நிவாரண உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : ’கரோனா தடுப்பூசி போட்டா ஹோட்டலில் 10% டிஸ்கவுண்ட்’