தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.4000த்தில், இரண்டாம் தவணை ரூ .2000 ரூபாய் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் அடுத்த கன்னங்குறிச்சியில் நடைபெற்றது .
அங்குள்ள நியாயவிலைக் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித் தொகையையும் 14 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பையும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கார்டுதாரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில்," கரோனோ காலத்தில் அரசு நிவாரண உதவித்தொகை முதல்கட்டமாக 2000 ரூபாய் ஏற்கனவே வழங்கியது. அதன் இரண்டாவது கட்டமாக 2000 ரூபாயை இன்று முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது . மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை தினம் 100 பேர் வீதம் வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுதாரர்கள் குறித்த நேரத்தில் சென்று ரேஷன் கடையில் உதவித்தொகையையும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பையும் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இறப்பு விகிதமும் குறைந்து உள்ளது.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிறைய காலியாக உள்ளன . பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கரோனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். மிக விரைவில் சேலம் மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாறி இயல்பு நிலைக்கு திரும்பும்" என்று தெரிவித்தார்.