சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சாமிவேல். இவரது விவசாய தோட்டத்தின் அருகே வசித்து வரும் தினேஷ்குமார் என்பவர் 2018ஆம் ஆண்டு, எட்டாம் வகுப்பு படித்து வந்த, சாமி வேல் மகள் ராஜலட்சுமியை கழுத்தறுத்து படுகொலை செய்தார்.
சாதி வன்மத்தால் நடந்த இந்த படுகொலை சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தலித் அமைப்புகள், அரசியல் கட்சியினர் இந்த சாதிய படுகொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, சேலம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுபோன்ற சாதிய படுகொலைகள் இனி நிகழாத வண்ணம் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பட்டியலின பெண்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. கொலை செய்த தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிறுமி ராஜலட்சுமி படுகொலை சம்பந்தமான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோர் சார்பில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதை மக்கள் தேசம் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி திறந்து வைத்து, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் அக்கட்சியின் மாநில அமைப்பாளர் செல்வகுமார் உடன் கட்சி நிர்வாகிகளும், சிறுமி ராஜலட்சுமியின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.