இது குறித்து இன்று சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சக்திவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில்," பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது பதவியில் உள்ள துணைவேந்தர் குழந்தைவேலு உதவியுடன் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது தொடர்பாக பலமுறை துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் புகார் கூறியும் பலனில்லை. அதேபோல பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் 22 நாட்கள் கணக்கீட்டில் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஒன்பதாண்டு காலத்திற்கு மேலாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் எங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பல்கலைக்கழக வளாகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள், அதற்கு அடுத்த நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள்.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல வகையில் அறவழிப் போராட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளோம். இந்த வாரத்திற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முன்வராவிட்டால் அடுத்த வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் செந்தாமரை, அனைத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத் தலைவர் பசுபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.