சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவில் 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் அந்த உதவி மையங்களில் பெண் குழந்தைகள், பெண்கள் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
அவர்களின் முன்னிலையிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கள்ளச்சாராயம் சேலம் மாவட்டத்தில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான துப்பாக்கிகளை வரும் திங்கள்கிழமைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.