சேலம்: பனமரத்துப்பட்டி ஆட்டையாம்பட்டி எடப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 12) அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. நாள்தோறும் பத்திரிகைகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன.
இது, மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் பயனற்ற மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதிமுக அரசு தமிழ்நாட்டில் நடைபெற்றபோது காவல் துறை சிறந்து விளங்கியது என்று இந்தியா டுடே நிறுவனம் தமிழ்நாட்டிற்கு விருது அளித்தது. அதனை நானே சென்று நேரடியாகப் பெற்றுவந்தேன்.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை மிரட்டுவது பொதுமக்களை தங்களுக்குத்தான் வாக்களிக்கச் சொல்லி அச்சுறுத்துவது என்பதைத்தான் திமுகவினர் செய்துவருகின்றனர்.
இதற்காகவா தேர்தல் நடைபெறுகிறது? இதற்குத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினால் நிச்சயமாக அதிமுக வெல்லும். தற்போது மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை இல்லை. எட்டு மாத கால ஆட்சியில் மக்கள் செல்வாக்கு இல்லாத அரசாக தற்போது திமுக அரசு உள்ளது.
மக்கள் மீது அக்கறை கொண்டு அம்மா மினி கிளினிக்கை நான் திறந்துவைத்தேன், தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் மீது அக்கறை இல்லாமல் அம்மா கிளினிக்கை மூடிவருகிறது.
நீட் தேர்வை திமுகதான் கொண்டுவந்தது, அதை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு பொய்களைக் கூறிவருகின்றனர். அது மக்களிடம் எடுபடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மதக்கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்ட திமுக!'