சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் கு.சித்ரா கலந்துகொண்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்சியர் சி.அ.ராமன் பேசுகையில், "முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்ப்பு கூட்டம் ஆகஸ்ட்19ஆம் தேதி எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்டபட்ட நங்கவள்ளியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 267 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 26 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அமைந்துள்ளது. விடுப்பட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கு வழங்கப்படும் சாதி சான்றுகள் குறித்த மனுக்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு தற்பொழுது சாதிசான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக மகளிர் திட்டம், மாவட்ட தொழில்மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் முறையான தொழில்பயிற்சிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொழில் முனைவோர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் தரமான ஆங்கில வழிக் கல்வியை அங்கேயே தங்கி பயிலும் வண்ணம் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி விரைவில் அமையப்பெறவுள்ளது. இதன் மூலம் உயர் தரத்திலான ஆங்கில வழிக் கல்வியை மாணவ, மாணவிகள் பெறுவார்கள்.
முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்த்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், மொத்தம் 192 பயனாளிகளுக்கு 19.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.