சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ். இவர் காக்காபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆபாச வீடியோ எடுத்து தன்னை மிரட்டுவதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .
இதுதொடர்பாக மகுடஞ்சாவடி போலீசாரிடம் விசாரித்தபோது, ' ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் மோகன்ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. மேலும் மோகன்ராஜ் பெண்கள் சிலரிடம் முறைகேடாக நடந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பெண் ஒருவரை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக தனது செல்போனில் மோகன்ராஜ் எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு செல்ஃபோன் கடையில் கொடுத்து இருக்கிறார். அங்கு அவரது செல்ஃபோனில் உள்ள வீடியோக்களை, செல்ஃபோன் கடைக்காரர் தரவிறக்கம் செய்து வாட்ஸ்அப்பில் உலவ விட்டிருக்கிறார். இதை விசாரணையில் உறுதிபடுத்திய பிறகு, பாலியல் வன்புணர்வு, மிரட்டல், ஆபாச வீடியோ எடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக மோகன்ராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆற்றில் மிதந்த சடலம் - சேலத்தில் பரபரப்பு!